ராஜபாளையத்தில் உள்ள புதுப்பாளையம் அருள்மிகு மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் வைபவம் நேற்று நடைபெற்றது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கியும், அக்னிச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ளது புதுப்பாளையம் அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயில். இங்கே 11 நாள்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா பிரசித்திபெற்றது. இந்த வருடம் கடந்த 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது சித்திரைப்பெருவிழா.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தின் சார்பில் மண்டகப்படி திருவிழா கொண்டாடப்பட்டது. தினம் தினம்... கண்ணாடி சப்பரம், பூதவாகனம், தண்டியல் சப்பரம், பூச்சப்பரம், தண்டியல் தட்டு சப்பரம் உள்ளிட்ட வாகனங்களில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் திருவீதியுலா வந்தாள் மாரியம்மன்.
இந்த விழாவின் முக்கிய அம்சமான பூக்குழி இறங்கும் வைபவம் நேற்று மாலை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நேற்று காலை முதலே கோயிலில் பக்தர்கள் அலகு குத்துதல், காப்பு கட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர். மூலவர் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து பிற்பகலில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் எழுந்தருள, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின் மாலை 4 மணிக்கு, அம்மன் சப்பரம் பக்தர்கள் புடைசூழ பூக்குழி திடலுக்கு எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து அங்கு நடந்த வழிபாட்டுக்கு பிறகு அம்மன் வீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின்போது பக்தர்கள் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து ராஜபாளையத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியையொட்டி காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர், ஊர்காவல் படையினர் என ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ளும் இந்த வைபவத்தையொட்டி, தென்காசி-மதுரை சாலையில் சிறிது நேரத்திற்குப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, சங்கரன்கோவில் சாலை வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.