ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி நாடார் தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோயிலில் கடந்த பிப்ரவரி 3-ம் தேதி மகா கும்பாபிஷேக விழா அதி விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 48 நாள்கள் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் நேற்று 48-ம் நாள் மண்டல பூஜைவிழா விமர்சையாக நடந்தது. விழாவை முன்னிட்டு, கணபதி ஹோமம், சங்காபிஷேகம், யாக சாலை பூஜைகள் நடைபெற்று, யாக சாலையில் வைத்துப் பூஜை செய்யப்பட்ட புனித நீர் கொண்டு மூலவர் திருமேனிகளுக்கு அபிஷேகிக்க மண்டலாபிஷேக விழா சிறப்புடன் நடைபெற்றது.

தொடர்ந்து சந்தனம், குங்குமம், பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான திரவியங்கள் கொண்டு அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனைத் தரிசித்தனர்.
விழாவில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.