
பழைமை மாறாமல் நவீனத் தொழில்நுட்பத்துடன் கும்பாபிஷேக திருப்பணிகள் இங்கு உள்ள ஆலயத்தில் நடந்து வருகின்றன.
ஆலயத் திருப்பணிகள் ஆன்ம சுத்தி அளிப்பவை மட்டுமல்ல, ஆனந்த வாழ்வையும் அருள்பவை.
அதனால்தான் நம் முன்னோர்கள் அதற்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறார்கள். ஊரில் ஒரு சிவாலயம் இருந்தால் அந்த ஊர் சுபிட்சமாகத் திகழும் என்கின்றன சாஸ்திரங்கள். புதிய கோயில்கள் பல கட்டுவதைக் காட்டிலும் பழைய கோயில்களைப் புனரமைப்பதன் மூலம் பழைய வரலாற்றைப் பாதுகாப்பதோடு இறை சாந்நிதியத்தை நிலை செய்யப் பெறலாம். அப்படி ஒரு திருப்பணிதான் நாகை மாவட்டம் மாத்தூரில் நடைபெற்றுவருகிறது. பழைமை மாறாமல் நவீனத் தொழில்நுட்பத்துடன் கும்பாபிஷேக திருப்பணிகள் இங்கு உள்ள ஆலயத்தில் நடந்து வருகின்றன.

நாகை மாவட்டம் திருக்கடையூருக்கு மேற்கு 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கிராமம் மாத்தூர். இங்குதான் ஸ்ரீஆனந்தவல்லி சமேத ஸ்ரீகயிலாசநாதர் ஆலயம் அமைந்திருக்கிறது. முன்பு இக்கிராமத்தில் சுமார் 200 அந்தணக் குடும்பங்கள் வசித்திருக்கின்றன. அவர்களின் குல தெய்வம் இங்கு கோயில்கொண்டிருக்கும் ஸ்ரீஅய்யனார். இன்று பலர் அந்தக் கிராமத்திலிருந்து வேறு ஊர்களுக்குப் புலம்பெயர்ந்துவிட்டாலும் ‘ஸ்ரீ மாத்தூர் சாஸ்தா பரிபாலன டிரஸ்ட்’ என்று அய்யனாரின் பெயரிலேயே ஓர் அறக்கட்டளையை ஏற்படுத்தி அதன் மூலமாக இக்கிராமத்தில் உள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் நடத்திவருகிறார்கள். இதுவரை சிவாலயங்கள், பெருமாள் கோயில், அய்யனார் கோயில் எனக் கடந்த 27 வருடங்களில் எட்டு கும்பாபிஷேகங்களை இந்த டிரஸ்ட் மூலம் செய்திருக்கிறார்கள். மேலும், இந்த டிரஸ்ட் மூலமாக ஆண்டுதோறும் அன்னதானம், முதியோர் இல்லங்களுக்கு வேண்டிய உதவிகள், புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும் நேரத்தில் மாத்தூர் கிராமத்தினருக்கு வேண்டிய உடனடி உதவிகள், பள்ளி மாணவர்களுக்குக் குடிநீர் வசதி, எழுதுபொருள் வழங்குதல், திறமையான மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்துவது, ஆன்மிகம் பரப்ப வேதபாட சாலை அமைத்து உதவி செய்வது போன்ற காரியங்களைச் செய்து வருகிறார்கள்.

தற்போது இந்த அமைப்பினரே ஸ்ரீஆனந்த வல்லி சமேத ஸ்ரீகயிலாசநாதர் ஆலயத் திருப்பணிகளை நடத்தி வருகின்றனர். இந்த ஆலயத்தில் சாலை உயர்ந்து, கோயில் சந்நிதிகள் தாழ்ந்து மழைக்காலங்களில் கோயில் சந்நிதிகளுக்குள் நீர் உட்புகுந்துவிடுகிறது. ஆகையால் இங்குள்ள விநாயகர், முருகன் மற்றும் அம்பாள் சந்நிதிகளை அப்படியே மூன்று அடிகள் உயர்த்தித் திருப்பணிகள் நடக்கின்றன.



பொதுவாகவே சிவாலயத் திருப்பணி காரியங்களில் பங்கு பெறுவதால் கிட்டும் விசேஷ பலன்கள் பற்றி ஸூப்ரபேதாகமம், அக்னி புராணம், பாகவதம், சிவதர்மம் திருமூலம், காமிகாமகம் ஆகிய பழைமையான நூல்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சில குடும்பங்களில் உள்ள நாள்பட்ட பிரச்னைகளுக்கு `சிவ அபராத தோஷமே' காரணம் என்கின்றன சாஸ்திரங்கள். சிவாலய திருப்பணிகளுக்குச் செய்யும் பொருள் உதவிகளால், கர்ம வினைகள், ஜன்மாந்திர பாவங்கள், சாபங்கள் நிவர்த்தியாகி குடும்பத்தில் அன்பும் அமைதியும் சந்தோஷமும் நிறையும் என்பது நம்பிக்கை.
சிவ பெருமான் கருணாமூர்த்தி. தேவ நதியான கங்கையைத் தன் சிரசில் தாங்கி இப்பூவுலகை ரட்சித்து அருள்பவர். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதில் உண்டான ஆலகால விஷத்தைத் தானே உண்டு எல்லா உயிர்களையும் காப்பாற்றியவர். சாமானியர்களுக்கும் அருள்பாலிக்க வேண்டி பல தலங்களிலும் கயிலாச நாதராய் எழுந்தருளி அருள்பாலிப்பவர். அப்படிப்பட்ட ஓர் ஆலயம்தான் இது. ஸ்ரீகயிலாசநாதர் ஒரு வரப்பிரசாதி. தன்னை வணங்கும் பலருக்கும் ஆச்சர்யமாக நற்பலன்களை அருள்பாலிக்கக் கூடியவர்.

இதுபற்றி ஆலய அர்ச்சகர்கள் மகாலிங்கம் மற்றும் அவரின் குமாரர் செந்தில் சிவாச்சாரியார்களிடம் பேசியபோது...

``பிரம்மா வழிபட்ட இத்தலத்து ஸ்ரீஆனந்தவல்லியை வந்து வணங்கினால் எண்ணிய காரியம் கைகூடும். ஆனந்த வாழ்வைப் பெறலாம். குழந்தை பாக்கியம் கிட்டும். மலைபோல் வரும் பிரச்னைகள் யாவும் பனிபோல் தீர்ந்துவிடும். இதை எங்கள் அனுபவத்தில் கண்டிருக்கிறோம். பக்தர்களும் வியந்திருக்கிறார்கள். இத்தலத்தை தரிசனம் செய்தால் நல்லது நடக்கும் என்பது நிச்சயம்.

சிவாலய திருப்பணிகளில் பங்கு கொள்பவர்கள் நல்ல வசீகரமும், செல்வமும், நல்வாழ்வும், வளமும் அடைந்து ஆனந்தமாக வாழ்வார்கள் என்பது ஆன்றோர் வாக்கு. எனவே, திருப்பணிகளில் நீங்களும் பங்கேற்று நலமாய் வளமாய் வாழ பிரார்த்திக்கிறோம்'' என்றனர்.
திருப்பணியில் பங்குகொள்ள விரும்பும் அன்பர்கள் கீழ்கண்ட முகவரிக்கு தங்கள் காணிக்கையை அனுப்பலாம். அதன் மூலம் ஸ்ரீகயிலாசநாதரின் இறையருள் பெறலாம்.
S.M.S.P. TRUST
S.B. A/C. 0004145 0000 499
HDFC BRANCH
ITC TRADE CENTER
ANNA SALAI
CHENNAI
சுவாமியைக் கோபிக்காதீர்கள்!
தள்ளாத வயதிலும் பொது நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார் பக்தவத்சலம். குறிப்பாக, கோயில் விழாக்கள் என்றால் எக்காரணம் கொண்டும் தட்டவே மாட்டார்!
ஒருமுறை, சென்னை- வடபழநி கோயிலில் ஆன்மிக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தவத்சலத்துக்கு பரிவட்டம் கட்டி கௌரவித்தனர். பிறகு, கற்பூர ஆரத்தித் தட்டினை அவர் முன் நீட்டினார் குருக்கள்.
பக்தவத்சலத்துக்கு லேசாக பார்வைக் குறைபாடு ஏற்பட்டிருந்தது. எனவே, ஆரத்தித் தட்டு சரிவர தெரியாததால், கற்பூர தீபத்தில் கையை வைத்து சுட்டுக் கொண்டார். அருகில் இருந்தவர்கள் பதறிப் போனார்கள். அந்த குருக்களை கடிந்து கொண்டார்கள்.
உடனே பக்தவத்சலம், ''எனக்கு பார்வைக் குறைவு என்பது குருக்களுக்குத் தெரியாது. இதை அறிந்த நீங்கள்தான் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். தவிர, சந்நிதானத்தில் குருக்களை கோபித்துக் கொள்வது என்பது, சுவாமியையே கோபிப்பது போலாகும்'' என்று கண்டித்தார்.
கே.எம்.ரவிச்சந்திரன், மதுரை-20