கரக்கோயில் அற்புதம்!
தேவார திருத்தலங்களில் - சோழ நாட்டின் காவிரி வடகரையில் அமைந்துள்ள 34-வது சிவத் தலமாகப் போற்றப்படுவது திருக்கடம்பூர். தற்போது மேலக்கடம்பூர் என வழங்கப்படுகிறது. இவ்வூர் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் உள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தமிழக சிவாலயங்கள் ஒன்பது வகைப்படும். அவற்றில், கடம்பூர் திருக்கோயில் `கரக்கோயில்' வகையைச் சார்ந்தது, கருவறையே தேர் அமைப் பில் திகழும் கோயில். அதாவது, நான்கு சக்கரங் களுடன் கிழக்கு நோக்கிய குதிரைகள் பூட்டபெற்ற நிலையில் தேர் வடிவிலான கட்டுமானம் கொண்டது.
இத்தல இறைவனை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், ராமலிங்க சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகள் போன்ற அடியார்கள் பாடல்கள் பாடி வழிபட்டுள்ளனர்.
ராஜேந்திர சோழர் கொண்டுவந்த சதுர தாண்டவர்!
முதலாம் ராஜேந்திர சோழன், தமது வங்கப் படையெடுப்பின்போது, வங்கத்தின் இரண்டாம் மகிபாலனை வென்று, அங்கிருந்த தசபுஜ ரிஷப தாண்டவமூர்த்தி எனும் பஞ்சலோக விக்கிரகத்தினை வெற்றிச்சின்னமாக தனது அரண்மனைக்குக் கொண்டு வந்தார். அதன் பின்னர், முதலாம் குலோத்துங்கன் இக்கோயிலைக் கட்டியபோது, இச்சிலையை இங்கே கொடுத்துச் சென்றார் என்பது வரலாறு.

செவ்வக பீடத்தில் தாமரையின் மீது, காளையின் மேல் சதுர தாண்டவம் ஆடும் கோலத்தில் அருள்கிறார் இந்த மூர்த்தி. பாதுகாப்பு ஏற்பாடு காரணமாக, பிரதோஷ திருநாளில் மட்டுமே இந்த மூர்த்தி எழுந்தருள்கிறார். அன்று விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
அமிர்தத்தால் உருவான ஈசன்...
தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்து அமுதக் கலசம் பெற்றனர். முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபடாமல் அமுதுண்ண முடிவு செய்தனர். அவர்களுக்குப் பாடம் புகட்ட எண்ணி, விநாயகர் அமுத கலசத்தினை பூலோகத்தில் மறைத்து வைக்க எடுத்துவரும் வழியில், ஒரு துளி அமிர்தம் கடம்பவன காட்டில் விழுந்தது. அதுவே, சுயம்பு லிங்கமாக மாறியது. அவரே இத்தல அமிர்தகடேசுவரர்.

இத்திருக்கோயிலை இந்திரனின் தாய் அதிதி தினம்தோறும் வந்து வழிபட்டாள். தன் தாயின் வழிபாட்டை எளிதாக்க எண்ணி, இந்திரன் இத்தல இறைவனையும் பிற தெய்வங்களையும் அழகிய தேரில் வைத்து எடுத்துச் செல்ல முற்பட்டான். அவன் ஆணவத்தை அடக்கும் பொருட்டு, தல விநாயகர் விசுவரூபம் எடுத்து தேரைக் காலால் அழுத்த, தேர் கல்லாய் சமைந்ததாம். பிழை உணர்ந்த இந்திரன் ருத்திர கோடி ஜபம் செய்து ஒரு லிங்கம் பிரதிட்டை செய்து பாபநிவர்த்தி பெற்றான்.
அப்படி, இந்திரன் ருத்ரகோடி ஜபம் செய்து லிங்கம் பிரதிஷ்டை செய்த அக்கோயில், இத்தலத்தின் கிழக்கே ஒரு கி.மி. தூரத்தில் ருத்ரகோடீஸ்வரர் ஆலயம் என்ற பெயரில் விளங்குகிறது. அமிர்தத்தால் உருவான இந்த இறைவனை வணங்கினால் மரண பயம் நீங்கி வாழலாம்.
சதய நட்சத்திரத்தில்...
* அஷ்டமி திதி இரவில் வணங்கவேண்டிய கால வைரவர், இக்கோயிலின் விசேஷம்.சனி பகவான் இங்கே கழுகு வாகனத்தில் காட்சி தருகிறார்.
* பெரும்பாலான கோயில்களில் ஐம்பொன் விக்கிரகமாக அருளும் நடராஜரும் சிவகாமி அம்மையும் இங்கே கல்விக்கிரகமாகவே எழுந்தருளியுள்ளார்கள்.

* கடம்பவன தலமாதலால், சதய நட்சத்திர அன்பர்கள் வழிபட வேண்டிய தலம் இது என்கின்றன ஞான நூல்கள். பங்குனி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் காலை 6.15 மணிக்கு சூரியக் கதிர்கள் அமிர்தகடேசுவரர் மேனியைத் தழுவி வழிபடுவது அற்புதம்.
விசேஷ கோலங்களில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி!
மேலக்கடம்பூர் திருக்கோயில் சிற்பக் கலைக் கோயிலாகவும் உள்ளது.
முதலாம் குலோத்துங்கனால் கட்டப்பட்ட கருவறை வெளிச்சுவரில் ஐந்து தேவகோட்டங்கள் உள்ளன. கருவறை தேவகோட்டத்தில் ஆலமர்செல்வன் கட்டுமலை ஒன்றின்மேல் காளை மீது அமர்ந்து ஞானமூர்த்தியாகவும், அதன் மேல் மாடத்தில் யோகபட்ட நிலையில் கையில் வீணையுடனும் முதல் தளத்தில் நின்றபடி வீணாதரராகவும் அருள்கிறார்.

அதேபோல் மற்றுமுள்ள தேவகோட்ட தெய்வங்களாக மகாவிஷ்ணுவும் பிரம்மனும் அருள்கின்றனர். ஒவ்வொன்றிலும் மூன்று தளங்கள் திகழ... ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு வடிவில் அருகின்றனர். கருவறை புறச்சுவர் முழுவதும் 63 நாயன்மார் களின் திருக்கதைகள் குறித்த சிற்பங்களும், நாட்டியக் கரணங்களும், சிவமகேஸ்வர வடிவங்களும், முக்கோடி தேவர் வழிபடும் காட்சியும், ராமாயண, கிருஷ்ண லீலைகள் தொடர்பான சிற்பங்களும் கொள்ளை அழகோடு திகழ்கின்றன!
இந்த அற்புத மூர்த்திக்கான விசேஷ வழிபாட்டை வீடியோ வடிவில் காண...https://www.youtube.com/watch?v=gMBI83ervgY