கும்பாபிஷேகம் காணவிருக்கும் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில் குறித்த 20 தகவல்கள்!
16 ஆண்டுகள் கழித்து தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருத்தலத்தில் 2020-ம் ஆண்டுக்கான கும்பாபிஷேக விழா பிப்ரவரி 5-ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.
தருமமிகு சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில் புராண பெருமை, திருமுறைப் பெருமை, வரலாற்றுப் பெருமை ஆகியவற்றை தன்னகத்தே பெற்றுள்ளது. இத்தகைய திருக்கோயிலின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருத்தலம் பற்றிய தகவல்களைத் தொகுத்து தந்துள்ளோம்.
1. சென்னையில் சிறந்துவிளங்கும் சிவத்தலங்களில் முக்கியமானவை, வடக்கில் திருவொற்றியூர், மத்தியில் திருமயிலை, தெற்கில் திருவான்மியூர் ஆகியன.
2. திருவான்மியூர் தலத்தில் பிறந்தாலும் இறந்தாலும், இத்தலத்தைக் கண்டாலும் நினைத்தாலும் முக்தி என்கிறது பழைய தலபுராணம். 1,300 ஆண்டுகள் பழைமையைக் கொண்டு திகழும் இந்தத் திருத்தலம் அப்பர், சம்பந்தர் ஆகிய சமயக்குரவர்களும் சேக்கிழார், அருணகிரிநாதர் போன்ற மகான்களும் போற்றிப் பாடிய சிறப்பை உடையது.
3. மார்க்கண்டேயர் சொன்னதன்படி தென்திசை பயணித்த வான்மீகி (வால்மீகி) முனிவருக்கு, கிழக்குக் கடற்கரையோரத்தில், `நான் இங்கே இருக்கிறேன்' என அசரீரி மூலம் ஒலித்து வன்னிமரத்தடியில் ஈசன் உமையம்மையோடு திருக்காட்சி அருளிய தலம் என்பதால் திருவான்மியூர் என்று பெயர்பெற்றது.
4. கயிலாயத்திலிருந்து தென்திசை வந்த அகத்திய முனிவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. அவர் இத்தலத்தில் சிவனை நோக்கி வழிபாடு செய்ய வன்னிமரத்தடியில் உமையோடு இறைவன் தோன்றி அவரது நோய் நீக்கியதோடு உடலில் உண்டாகும் நோய்கள் குறித்தும் அதற்கான மருந்துகளாகும் மூலிகைகள் குறித்தும் உபதேசம் செய்தார். பிறவிப்பிணி தீர்க்கும் ஈசன் உடல்பிணிக்கும் மருந்துரைத்த தலம் ஆதலால் இத்தல இறைவன் மருந்தீஸ்வரர் என அழைக்கப்பட்டார்.
5. காசிபமுனிவரால் சாபம் பெற்ற காமதேனு, மருந்தீஸ்வரர் திருமேனியில் பால் தினம் சொரிந்து பாவம் நீங்கப் பெற்றது. காமதேனு கால்குளம்பு பட்டதால் உண்டான வடுவை லிங்க சிரசில் இன்றும் நாம் காணலாம்.
6. காமதேனு பால் சொரிந்ததால் வெண்மையாகக் காட்சியருளும் இந்த ஈசனை பால்வண்ணநாதர் என்கின்றனர். திருப்பாற்கடலில் தேவர்கள் கடைந்தெடுத்த அமுதத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் மூலவருக்கு அமுதீசர் எனவும் பெயர். நான்கு வேதங்களும் வணங்கித் துதித்துப் பூஜித்ததால் இவரை `வேதபுரீஸ்வரர்' என்று அழைக்கின்றனர்.

7. இறைவன் சிரசில் பொழியும் கங்கையிலிருந்து விழுந்த ஐந்து துளிகள் ஜன்மநாசினி, காமநாசினி, பாபநாசினி, ஞானதாயினி, மோட்சதாயினி என பஞ்ச தீர்த்தங்களாய் இத்தலத்தில் தோன்றின.
8. பஞ்ச தீர்த்தங்களில் சூரியன், பிரம்மன், யமன், இந்திரன், ராமர், சந்திரன் ஆகியோர் நீராடி சிவபூசை செய்து பாவம் நீங்கப் பெற்றதாய் தலவரலாறு கூறுகிறது. பஞ்ச தீர்த்தங்களில் பெரிய தெப்பக்குளமான பாபநாசினியும், சித்திரைக்குளமான ஜன்மநாசினியும் மட்டும் தற்போது இருக்கின்றன.
9. வேத ஆகம விதிமுறைகளின்படி வான்மீகி முனி மூலம் பிரம்மனால் அமைக்கப்பெற்றது, இந்தத் திருத்தலம். மாடவீதி, திருத்தேர், உற்சவ விக்கிரகங்கள் ஆகியவற்றை உருவாக்கிய பிரம்மனே இத்தலத்துக்கான 11 நாள் பங்குனி பிரம்மோற்சவத்தையும் ஏற்படுத்தி இறைவனை வழிபட்டார் என்கிறது பழைய தலவரலாறு.
10. வைகாசி வசந்தோற்சவத்தின் 11 நாள்களும் இங்கு சிறப்பு. பிரதோஷம், கிருத்திகை, பௌர்ணமி, ஐப்பசி அன்னாபிஷேகம், பவித்ரோற்சவ விழா, விநாயகர் சதுர்த்தி, கந்த சஷ்டி, நவராத்திரி, கார்த்திகை தீபம், ஆருத்ரா விழா, ஆடிப்பூரம், கார்த்திகை சோமவார 108 சங்காபிஷேகம், சிவராத்திரி 4 கால அபிஷேகங்கள் ஆகியவை திருக்கோயிலின் உற்சவச் சிறப்புகள்.

11. மருந்தீஸ்வரர் தலம், தொண்டை நாட்டில் பாடல்பெற்ற 32 திருத்தலங்களுள் ஒன்று. `விடையார் கொன்றையினாய்' ஞானசம்பந்தர் பதிகம், `விண்ட மாமலர் கொண்டு' நாவுக்கரசர் பதிகம் ஆகியவை இத்தலத்துப் பெருமைகளை எடுத்தியம்புகின்றன.
12. திருத்தலச் சிறப்பை 7 பாடல்களுள் விளம்புகிற சேக்கிழார் திருத்தொண்டர் புராணம், இத்தலத்து முருகனை துதித்து அருணகிரிநாதர் பாடிய `குசமாகி யாருமலை' திருப்புகழ் ஆகியவை தலப்பதிகங்களாகத் தேவாரத் திருமுறையில் இடம்பெற்றுள்ளன. பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் இத்தலத்து முருகன் பெருமைகளைப் பாடியுள்ளனர்.
13. இங்கே வன்னி மரத்தடியில் வான்மீகி முனிவர் கண்டெடுத்த சுயம்புலிங்கமே, இங்கு அருளும் மூலவர். அதுபோல இங்கேதான் அகத்தியர் வேண்டுகோளுக்கிணங்க வன்னி மரத்தடியில் சிவனார் தமது திருமணக் காட்சியைக் காட்டியருளினார். எனவே, தலவிருட்சமான வன்னிமரம், கோயிலின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது.
14. அம்பாள் திரிபுர சுந்தரி, நின்ற கோலத்தில் அருள்புரிகிறாள். வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரவார அம்மன் உட்புறப்பாடு நடைபெறுகிறது. தியாகராசர் உலோகத் திருமேனி உற்சவராக விளங்குகிறார். பௌர்ணமி மற்றும் விசேஷ நாள்களில் இங்கு நடைபெறும் தியாகராஜர் திருவீதியுலாவும் அவரது 18 திருநடனக் காட்சிகளும் சிறப்பு.
15. ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுரம், கிழக்கில் அமைந்துள்ளது. வண்ணம் மிகுந்த சுதை சிற்பங்கள் தாங்கிய ஐந்து நிலைக் கோபுரங்களாய் மேற்குக் கோபுரமும் ரிஷி கோபுரமும் விளங்குகின்றன. பெரிய குளம், கோயிலின் கிழக்கில் அமைந்துள்ளது. கிழக்கு வாயிலுக்கு வெளியே சித்திரைக்குளம் அமைந்துள்ளது.
16. கிழக்கிலிருந்து உள்ளே நுழைய, விஜய கணபதி சந்நிதி, வள்ளி தெய்வானையுடன் நின்ற கோலத்தில் முருகப்பெருமான் தனிச்சந்நிதி ஆகியன அமைந்துள்ளன. ஆஞ்சநேயர், கமல விநாயகர், தண்டாயுதபாணி ஆகியோரும் அருளுகின்றனர்.
17. மண்டபத்தில் நாயன்மார் திருவுருவங்கள், 108 சிவலிங்கங்கள் காணப்பெறுகின்றன. சபா மண்டபத்தினுள் தியாகேசர், அம்மன், தனியம்மன் உற்சவமூர்த்திகள் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.
18. சூலம், உடுக்கை, சர்ப்பம் ஏந்திய காலபைரவர் காட்சி தருகிறார். பஞ்சலிங்கங்கள் நிறுவப்பெற்றுள்ளன. இதில் பெரிய லிங்கம், கேதாரீஸ்வரர். இவரை கேதார கௌரி விரதம் இருக்கும் பெண்கள் வழிபடச் சிறப்பு. திருமால், தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், அண்ணாமலையார், துர்கா தேவி ஆகியோர் சந்நிதி கொண்டு அருள்கின்றனர்.
19. சோழர்கள், பல்லவர்கள், விஜயநகரப் பேரரசர்கள் எனப் பலரும் இத்திருக்கோயிலுக்குத் தொண்டாற்றி உள்ளனர். திருக்கோயில் வழிபாட்டில் மிகவும் ஈடுபாடுகொண்ட கங்கைகொண்ட சோழன் எனப்படுகிற ராஜேந்திர சோழன். அடிக்கடி இந்தத் தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டுள்ளான். கடும்நோய் நீங்குதல் வேண்டி இத்தலம் வந்து மருந்தீஸ்வரரை வழிபட்டு உடல்நலம் பெற்றுள்ளான்.
20. கும்பாபிஷேகம் 40 ஆண்டுகளாக நடைபெறாது இருந்த நிலையில் 1978-ம் ஆண்டு முழுமையான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 1979-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட்டது. தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணிகளும் அதைத் தொடர்ந்த குடமுழுக்கு வைபவங்களும் சிறப்பாக நடந்தேறின.
கும்பாபிஷேகத்துக்குத் தயாராய் இருக்கும் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில் புகைப்படத் தொகுப்பு.
கடந்த இருபதாண்டுகளில் திருத்தேர், தங்கரதம், ராஜகோபுரம், தெப்பக்குளங்கள் ஆகியவை திருப்பணிகள் செய்யப்பட்டு அழகாகப் புதுப்பிக்கப்பட்டன. சமய நூலகம், அலுவலகம் புதியதாகக் கட்டப்பட்டன.
முந்தைய குடமுழுக்கு விழா 2004-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் நாளன்று சிறப்பாக நடைபெற்ற நிலையில் 16 ஆண்டுகள் கழித்து தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருத்தலத்தில் 2020-ம் ஆண்டுக்கான கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.