தர்மத்திற்கு கேடு செய்து, தேவர்களுக்குக் கொடுமைகள் பல புரிந்த சூரபத்மனை, சிவனின் அம்சமாகவே பிறந்து வளர்ந்த முருகப்பெருமான், நாகப்பட்டினம் அருகேயுள்ள சிக்கல் கோயிலில் சக்திவேல் வாங்கி,செந்தூரிலே சம்ஹாரம் செய்தார்.
இங்ஙனம் சூரபத்மனை சம்ஹாரம் செய்ததால் முருகனுக்கு வீரஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்தைப் போக்க, தந்தையாகிய சிவனாரின் ஆணைக்கேற்ப, முருகப்பெருமான் நவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து பூஜித்து, தோஷம் நீங்கப் பெற்றார். அவற்றில் ஐந்து தாலங்கள், பஞ்ச கடம்ப திருத்தலங்கள் எனச் சிறப்பிக்கப்படுகின்றன.
`கந்தா... கடம்பா...' என்றழைக்கப்படும் முருகனுக்குக் கடம்ப மலர்கள்மீது பிரியம் அதிகம். ஆகவே, கந்தனைக் ‘கடம்பன்’, ‘நம் கடம்பன்’ என்று சமயக் குரவர்களும், `கந்தக் கடம்பன்' என்று அருணகிரிநாதரும் போற்றுகின்றனர். அவ்வகையில், பஞ்சகடம்ப கோயில்கள் அந்தக் கடம்பனின் புகழைத் தாங்கி திகழ்கின்றன.

அவை: கோயில்கடம்பனூர், ஆழிக்கடம்பனூர் (ஆழியூர்), இளங்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பர வாழ்க்கை. இந்தத் தலங்களை தரிசித்தால் நாக தோஷம், களத்தர தோஷம், புத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம் உள்ளிட்ட எல்லா தோஷங்களும் நீங்கப்பெறலாம் என்பது ஐதிகம். கந்தனே தன் கஷ்டம் நீங்க வணங்கிய பஞ்ச கடம்பத் தலங்களும் தகவல்களும் உங்களுக்காக.
அத்துடன், முருகப்பெருமான் நவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று பார்த்தோம் அல்லவா, அந்த அருள்சம்பவம் குறித்த சிறப்புத் தகவல்களும் தனியே இடம்பெற்றுள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSகோயில்கடம்பனூர்
ஸ்வாமி : ஸ்ரீசௌந்தரநாயகி சமேத ஸ்ரீகயிலாசநாதர்.
திருத்தலச் சிறப்புகள் : வீரஹத்தி தோஷம் தீர முருகவேள் முதலாவதாக வழிபட்ட தலம் இது. இங்கே ஸ்ரீசௌந்தரநாயகி சமேத ஸ்ரீகயிலாச நாதரையும் பிரதிஷ்டை செய்ததுடன், பாதாள கங்கை என்னும் தீர்த்தத்தையும் உருவாக்கி வழிபட்டாராம் முருகப்பெருமான். இன்றும் இத்தலம் கோயில்கடம்பனூர் என்றழைக்கப்படுகிறது.

எப்படிச் செல்வது : நாகை - திருவாரூர் சாலையில் அகரக் கடம்பனூர் பேருந்து நிலையத்தில் இறங்கினால், அரை கி.மீ தொலைவில் உள்ளது. தொடர்புக்கு: தண்டபாணி குருக்கள் (97893 15545).
மஞ்சள் பிள்ளையார்!
முருகனுக்கு வீரஹத்தி தோஷம் நீங்கும் பொருட்டு, “தட்சிணப் பதரிவனத்துக்குச் (நாகை மாவட்டம், கீழ்வேளூர், அட்சய லிங்க சுவாமி கோயில்) சென்று, அதை மையமாகக் கொண்டு நவ லிங்கங்கள் பிரதிஷ்டை செய்து பூஜித்து தவம் செய்தால், தோஷம் நீங்கும்'' என வழிகாட்டி அருளினார் சிவனார். அதன்படி கீழ்வேளூர் தலத்துக்கு வந்த முருகன், அங்கே மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து விக்னேஷ்வர பூஜையை தொடங்கினார். அந்த இடம் கீழ்வேளூர் அருகே இன்றும் மஞ்சவாடி என்றழைக்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆழிக்கடம்பனூர்
ஸ்வாமி : ஸ்ரீதருணேஸ்வரி சமேத ஸ்ரீசதுர்வேதபுரீஸ்வரர்
திருத்தலச் சிறப்புகள் : சிவகங்கை தீர்த்தத்தை உருவாக்கி, தருணேஸ்வரி சமேத சதுர்வேத மூர்த்தி என்னும் திருப்பெயரில் அம்மையப்பரை வேலவன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஊர், ஆழிக்கடம்பனூர். இன்றைக்கு ஆழியூர் என்று அழைக்கப்படுகிறது.

எப்படிச் செல்வது : நாகை - திருவாரூர் சாலையில் ஆழியூர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ளது (தொடர்புக்கு : பாலகிட்டு குருக்கள் - 8056657148).
நான்கு தலங்கள்!
நவலிங்க பூஜை செய்ய முருகன் உருவாக்கிய தலங்களில் பஞ்சகடம்ப தலங்களும் அடங்கும் எனப் பார்த்தோம். மற்ற நான்கு தலங்கள்... வல்லமங்கலத்தில் ஸ்ரீநர்மதேஸ்வரி சமேத ஸ்ரீநர்மதேஸ்வரர், பட்டமங்கலத்தில் ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீவிஸ்வநாதர், சொட்டால்வண்ணத்தில் ஸ்ரீமகேஸ்வரி சமேத ஸ்ரீபூதேசர், ஓதியத்தூரில் ஸ்ரீதூலாநாயகி சமேத ஸ்ரீதூலேசர் ஆகியோரை நிறுவி வழிபட்டாராம்.
இளம்கடம்பனூர்
ஸ்வாமி : ஸ்ரீசௌந்தரநாயகி சமேத ஸ்ரீசோளீஸ்வரர்.
திருத்தலச் சிறப்பு : ஸ்ரீசௌந்தரநாயகி சமேத
ஸ்ரீசோளீஸ்வரரை ஸ்தாபித்து, சரவணப்பெருமான் சிவனாரை வணங்கி இளைப்பாறிய தலமாகும். இங்குள்ள அம்பிகையை வழிபட்டால், நம் வாழ்வை அழகியவண்ணமாய் மாற்றியருள்வாள்; ஈஸ்வரன் நாம் கேட்கும் வரங்களை வாரி வழங்கு வார் என்கிறார்கள் பக்தர்கள்.

எப்படிச் செல்வது : நாகை - திருவாரூர் சாலையில் ஆழியூரில் இறங்கி வடக்கே 4 கி.மீ தூரம் பயணித்தால், இளம்கடம்பனூரை அடையலாம். ஆட்டோ வசதியுண்டு. (தொடர்புக்கு: பாலசுப்பிரமணிய குருக்கள் - 86087 17822).
முருகனின் தவம்
நவலிங்க பூஜையை முடித்தபின், முருகன் கீழ்வேளூர் ஸ்ரீஅட்சயலிங்க சுவாமி கோயிலின் முன் தன் வேலால் பூமியில் குத்தி சரவணப்பொய்கை தீர்த்தத்தை உண்டாக்கி நீராடினார். பின்னர், இலந்தை மரத்தினடியில் சுயம்பு லிங்கமாக அருளும் அட்சயலிங்கப் பெருமானை வழிபட்டு, வடதிசை நோக்கி நின்ற கோலத்தில் தவத்தைத் தொடங்கினார். அவருடைய தவத்தைக் கலைக்கும் வண்ணம் வீரஹத்தி பெரும் இடையூறு விளைவித்தது.
கடம்பரவாழ்க்கை
ஸ்வாமி : ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீவிஸ்வநாதர்.
திருத்தலச் சிறப்புகள் : இறைவன் அருள்மிகு விஸ்வநாதர், தான் கொண்டிருக்கும் திருப் பெயருக்கு ஏற்ப, நம் பாவங்களையெல்லாம் போக்குபவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஸ்வாமிக்கு ஸ்ரீசகளநாதர் என்றும் ஒரு பெயர் உண்டு. அதேபோல், அம்பிகை விசாலாக்ஷிக்கும் ஸ்ரீலோகாம்பாள் என்றொரு பெயர் உண்டு.

எப்படிச் செல்வது : நாகை - திருவாரூர் சாலையில் ஆழியூரில் இறங்கி, வடக்கே 2 கி.மீ தொலைவு பயணித்தால் கடம்பர் வாழ்க்கையை அடையலாம். ஆட்டோ வசதியுண்டு தொடர்புக்கு : சுரேஷ் குருக்கள் (87608 88429).
அஞ்சுவட்டத்தம்மன்
முருகனின் அல்லல் அகற்ற பத்ரகாளி அவதாரம் எடுத்த அம்பிகை, அஞ்சுவட்டத்தம்மன் எனும் திருநாமத்துடன் கீழ்வேளூரில் கோயில் கொண்டிருக்கிறாள். இவளை வழிபட்டால் திருமணத்தடை, தொழில் பிரச்னைகள், கிரக தோஷங்கள் உள்ளிட்ட பிரச்னைகள் நீங்கும்; புத்திரபாக்கியம் வாய்க்கும் என்கிறார்கள்.
பெருங்கடம்பனூர்
ஸ்வாமி : ஸ்ரீசுந்தகேசி அம்பிகை சமேத ஸ்ரீசோமநாதர்.
திருத்தலச் சிறப்புகள் : நாயன்மார்களில் ஒருவரான கோட்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில் இதுவாகும். இத்தல இறைவனுக்கு `முழுமதி சூடி உடனுறை நான்மறையூரார்' என்ற பெயருமுண்டு. இந்த ஊர் எல்லையில், முருகனுக்குக் காவலராக வந்த பைரவர் வீற்றிருக்கிறார். ஜாதகத்தில் சந்திர பலம் பெறவிரும்பும் அன்பர்கள் இந்தச் சோமநாதரை வழிபடலாம்.

எப்படிச் செல்வது : நாகை - திருவாரூர் சாலையில் ஆழியூரில் இறங்கி,வடக்கே 4 கி.மீ தொலைவு பயணித்தால் பெருங்கடம்பனூரை அடையலாம். ஆட்டோ வசதியுண்டு. (தொடர்புக்கு : கல்யாண குருக்கள் - 74023 86582).
தோஷம் நீங்கியது!
முருகனுக்கு உதவியாக தாய் சுந்தரகுஜாம்பிகை அஞ்சுவட்டத்தம்மனாக எழுந்தருளி, நான்கு திசைகளோடு ஆகாயத்தையும் சேர்த்து ஐந்து புறங்களிலும் காவலாகி நின்று வீரஹத்தியை விரட்டியடித்தாள். முருகப்பெருமானும் மனநிறைவுடன் தவத்தைப் பூர்த்தி செய்து வீரஹத்தி தோஷம் நீங்கப் பெற்றார்.