நம் மரபில் ஆலயங்கள் வெறும் ஆலயங்கள் மட்டுமல்ல, அவை கலைகளின் பிறப்பிடங்கள், பண்பாட்டுப் பொக்கிஷங்கள், வரலாற்று ஆவணங்கள், ஆபத்துக் காலங்களில் மக்களுக்குப் புகலிடங்கள். அதனால்தான் ஊர்தோறும் ஆலயம் எழுப்பி அருந்தொண்டாற்றினார்கள் மன்னர்கள். தெய்வம் நம் மத்தியில் இருக்கிறது என்கிற நம்பிக்கை மக்களை நல்வழியில் நடத்தியது. ஆனால், அவற்றை செல்வச் செழிப்புகளாக மட்டும் கண்ட அந்நியர்கள், சூறையாடி சிதைத்தனர். அப்படி சிதிலமடைந்த கோயில்களைப் புனரமைக்க யாரும் முன்வராததால், வழிபாடுகள் நிறைந்து விளங்கிய கோயில்கள் வழக்கொழிந்துபோயின. இன்று இருள்மண்டிக்கிடக்கும் அருள் நிறைந்த ஆலயங்கள் பல. அப்படி ஓர் ஆலயம்தான், பாதிராப்புலியூரில் உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே 21 கி.மீ தொலைவில் உள்ளது பாதிராப்புலியூர். இங்குதான் அருள்மிகு காமாட்சியம்மன் உடனுறை கயிலாசநாதர் திருக்கோயில் உள்ளது. புராணச் சிறப்புமிக்க இந்த ஆலயம் இன்று செடி, கொடிகள் நிறைந்து சிதிலமடைந்து கிடக்கிறது.
ஈசன் மேல் நேசம் கொண்டவர் புலிக்கால் முனிவர் (வியாக்ரபாதர், மழன்), இறைவனை பூஜித்த தலம் இது. அவரின் பெயர்கொண்டே இத்தலம் `பாதிராப்புலியூர்’ என்று வழங்கப்படுகிறது.
ஊரின் நடுவே கோட்டையைப் போன்று காட்சி அளிக்கிறது இந்த ஆலயம். வடக்கு திசை வாயிலைக் கொண்ட ஆலயத்தில், பெரிய அளவிலான மகாமண்டபமும் அம்மண்டபத்துக்கு இணையான அர்த்த மண்டபமும் காணப்படுவதோடு, கிழக்கு திசை நோக்கிய சதுர வடிவக் கருவறை, கருவறைக்கு முன் இரு துவாரபாலகர்கள் என அழகிய வடிவம் கொண்டுள்ளது.

அடித்தளத்தைக் கருங்கற்களைக் கொண்டும், ஆலயத்தை சுண்ணாம்பு, சுதைபொருளைக் கொண்டும் மிகுதியான சிற்ப வேலைப்பாடுகளுடன் அழகுற வடிவமைத்துள்ளனர் மன்னர்கள். தென்திசை நோக்கிய ஆலயத்தின் மகாமண்டபத்தில் நடராஜர் மண்டபமும் அர்த்த மண்டபத்தில் அன்னை காமாட்சியின் அறையும் அமைந்துள்ளன. விநாயகப் பெருமான் மற்றும் முருகப்பெருமான் வள்ளி - தெய்வானையுடன் காட்சியளிக்கும் எழிற்சிலைகளும் உள்ளன.
ஆலயத்தின் வெளிப்புறத்தில் தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள் ஆகியோரின் சந்நிதிகளும் தீர்த்தக் குளமும் உள்ளன.
ஆலயத்திலிருந்து தீர்த்தக் குளத்துக்குச் செல்வதற்கான பாதையில் ராஜகோபுரம் போன்ற அமைப்பு காணப்படுகிறது. இந்த ஆலயத்தின் தலவிருட்சம், செங்கொன்றை.
இவ்வளவு பிரமாண்டமாக அழகுறு வேலைப்பாடுகளோடு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயம், செஞ்சியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த நாயக்கர்களால் கட்டப்பட்டது. சுமார் 450 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயம், இன்று மாடுகள் கட்டும் கொட்டகையாக மாறியிருக்கிறது. வௌவால் குடியேறி புதர் மண்டிக்கிடக்கிறது. கோபுரங்கள் முழுவதும் செடிகொடிகள் வளர்ந்து சிதிலமடைந்து கிடக்கிறது. இத்தனைக்கும் இந்த ஆலயம் அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

சிவனாரின் ஆலயம் இப்படிச் சிதிலமடைந்து இருப்பது கண்டு மனம் நொந்த ஊர்மக்கள் ஒன்றுகூடித் திருப்பணி செய்ய முடிவு செய்து, அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இன்னும் அறநிலையத்துறையின் அனுமதி கிடைக்காமல் அதை மேற்கொள்ள முடியாமல் தவித்துவருகின்றனர்.
``எப்படியெல்லாம் வழிபாடுகள் நடைபெற்ற கோயில் இன்று இப்படி பூஜைகள் இன்றி இருண்டுகிடக்கிறது. முறையாக தீபாராதனை நடந்தே மூன்று வருடங்கள் ஆகின்றன. 20 வருடங்களுக்கு முன்புவரைகூட ஆறுகால பூஜைகள் நடைபெற்று வந்தன. பிரதோஷ தினங்கள் என்றால் நூற்றுக்கணக்கில் பக்தர்கள் வந்து வணங்குவார்கள். ஒவ்வோர் ஆண்டும் 9 நாள் திருவிழா சிறப்பாக நடைபெறும். தினமும் பல்வேறு வாகனத்தில் சுவாமி வீதி உலா வருவார். அந்த வாகனங்களை வைப்பதற்கெனவே தனியே இந்தக் கோயிலில் பெரிய வாகனக் கொட்டகை இருந்தது. தற்போது அது இருந்த இடமே இல்லாமல் போய்விட்டது. ஆலயத்தின் பின்புறம் கிழக்கு திசை நோக்கியபடி இருந்த விநாயகர் மற்றும் முருகன் சந்நிதிகளும் சிதிலமடைந்து போனதால், தற்போது அவை இல்லை. சிலைகள் மட்டும் ஆலயத்தில் உள்ளன. சிதம்பரம் தலத்தைப்போலவே இங்கிருக்கும் நடராஜர் நடன சபையும் சிறப்புக்குரியது.
இந்த ஆலயத்தில் இருந்த தட்சிணாமூர்த்தி சிலை எங்கு போனதென்றே தெரியவில்லை. மீதமுள்ள சிலைகளும் பாதுகாப்பின்றி இருக்கின்றன. செப்புத்திருமேனிகள் சிலவற்றை பாதுகாப்பு கருதி அருகிலுள்ள பகவான் ஆலயத்தில் வைத்துள்ளனர். கோயில் மற்றும் குளம் இரண்டும் சேர்த்து 6 ஏக்கர் பரப்பளவு இருக்கும். கோயிலுக்கென 25 குழி நஞ்சை நிலம் மட்டுமே சொத்தாக உள்ளது.
சுவர்களில் வேர் புகுந்து இடிந்துவிழத் தொடங்கிவிட்டன. இதனால் சிலைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் ஊர்மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மூன்று வருடத்துக்கு முன்பாக தகுந்த யாகங்கள் செய்து, ஓடுகளைக் கொண்டு தனியாகக் கூரை அமைத்து மூலவரையும் அம்மனையும் வைத்துள்ளோம். புதிதாக ஆலயத்தைப் புனரமைக்க முற்பட்டபோதுதான் அறநிலைத்துறை அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டனர். அதனால் புனரமைப்பு இன்றுவரை தடைபட்டுள்ளது” என்கிறார்கள் பூசாரிகள். வருமானம் ஏதும் இல்லாத நிலையிலும் ஈசனுக்குத் தங்களால் ஆன திருத்தொண்டாகக் கருதி இங்கு பூஜை செய்துவருகின்றனர்.
கோயிலைப் புனரமைக்க முயன்றுவரும் முத்துமல்லா என்பவரிடம் பேசினோம்.

``நாங்கள் கோயிலைப் புனரமைக்க வேண்டும் என முயன்றோம். அறநிலையத்துறை அனுமதி தரவில்லை. அவர்களே ஒரு குழு அமைத்து ஒரு பொறியாளரை நியமித்துப் பார்வையிட்டனர். அவர், கோயிலுக்கு ஸ்டெபிலிட்டி (ஸ்திரத்தன்மை) இல்லை என்றும், புதிதாகத்தான் கட்டியாக வேண்டும் என்றும் அறிக்கை அளித்துவிட்டார். தற்போது உள்ள சிறப்புகள் அப்படியே இருக்கும்படியாக புனரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தோம். தற்போது அந்தக் குழு அதற்கான அறிக்கையைத் தயார்செய்து ஒப்புதல் பெற்றுவிட்டதாகக் கேள்வியுற்றோம். ஆனால், அதற்கான எந்த ஆணையும் இதுவரை கிடைக்கவில்லை.
28.8.2019 அன்று நடைபெற்ற முதலமைச்சர் குறைதீர் கூட்டத்தில் ஊர்மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மனு கொடுத்துள்ளோம். மனுவை ஏற்றுக்கொள்வதாக குறுந்தகவலும் வந்துள்ளது. அனுமதி மட்டும் கிடைத்தால் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆலயத்தைப் புனரமைக்க முனைப்புடன் இருக்கிறோம்” என்றார்.
நிறைவேறும் வேண்டுதல்கள்!
நாகதோஷ பரிகாரம் செய்ய விரும்புவோர் இந்தத் தலத்தை ஒருமுறை சுற்றி வந்து கயிலாசநாதரை வழிபட தோஷம் நீங்கும். பிரதோஷ தினங்களில் வழிபட கல்விச்செல்வம் பெருகும். திருமணப் பிரச்னை, நிலம் சார்ந்த பிரச்னைகள் நீங்கும். கருணை வடிவான அன்னை காமாட்சியை வணங்க நினைத்தவை அனைத்தும் நிறைவேறும்.

எப்படிச் செல்வது?
திண்டிவனம் - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கூட்டேரிப்பட்டு, செண்டூர் வழியாகச் செல்லலாம். கூட்டேரிப்பட்டில் இருந்து பேருந்து, ஆட்டோ வசதிகள் உள்ளன.