பண்டிகை, காது குத்து, திருமணம் என எந்தவொரு சுப நிகழ்ச்சிக்கும் விடுப்பு என்று கேட்டால், கொடுக்க மாட்டார்கள். கடைசியாக நம்முடைய ஒரே ஆயுதத்தை, அதாவது உடம்பு சரியில்லை என்பதைத்தான் கையில் எடுப்போம். விடுப்பிற்காக, இல்லாத ஜுரத்தையும், இருமலையும் உதவிக்கு அழைத்து விடுவோம். பொய்யாக உடல்நிலை சரியில்லை என ஒரு காரணம் சொல்லி விடுப்பு எடுப்போம்.

இனி நீங்கள் இப்படி பொய்யாக விடுப்பு எடுக்க முடியாது. அப்படி எடுத்தால், செயற்கை நுண்ணறிவு (AI) உங்களை கையும் களவுமாக காட்டிக் கொடுத்துவிடுமாம்.
`ஏற்கெனவே அவங்களுக்கும் நமக்கும் வாய்க்கால் தகராறு’ என்பது போல, செயற்கை நுண்ணறிவால் பல ஊழியர்களின் வேலைகள் பறிபோகும் அச்சம் பரவலாக இருக்கிறது. இந்நிலையில், உடம்பு சரியில்லை எனப் பொய்யாக விடுப்பு எடுத்தாலும் பொய் சொல்கிறார்கள் எனக் காட்டிக்கொடுத்து விடுகிறதாம் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்.
குஜராத்தின் சூரத்தில் உள்ள சர்தார் வல்லபாய் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் 630 பேரின் குரல் பேட்டர்ன்களை ஆய்வு செய்தனர். இவர்களில் 111 பேருக்குச் சளி தொந்தரவு இருந்தது.
சளித் தொந்தரவால் பாதிக்கப்பட்ட நபர்களை அடையாளம் காண்பதற்காக இவர்களின் பேச்சு முறைகள் (speech patterns) பகுப்பாய்வு செய்யப்பட்டன.
அதேபோல மனிதர்களின் குரல் வடிவங்களும் ஆய்வு செய்யப்பட்டன. சளித் தொந்தரவால் பாதிக்கப்பட்டவர்களின் பேச்சில் சீரற்ற நிலை இருந்துள்ளது.
இந்தச் சோதனையில் பங்குபெற்றவர்களிடம், 1 முதல் 40 வரை கூறும்படி அறிவுறுத்தினர். அதோடு, கதைகளை வாசிக்கும்படியும் கூறப்பட்டது. இப்படிச் செய்தவர்களில் சளித் தொந்தரவால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவதன் துல்லியம், 70 சதவிகிதமாக இருந்தது.

Also Read
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், `மருத்துவரிடம் செல்லாமல் ஒருவருக்கு ஜலதோஷம் இருக்கிறதா, இல்லையா என்பதைத் தீர்மானிக்க இதுபோன்ற ஆராய்ச்சி உதவுகிறது.
ஆயினும்கூட, வேலையில் இருந்து விடுப்பு எடுப்பதற்காக உடல்நிலை சரியில்லாமல் நடிக்கும் ஊழியர்களைப் பிடிக்க விரும்பும் நிறுவனங்களுக்கு இந்த ஆய்வு ஆர்வமாக இருக்கலாம்’ என்று தெரிவித்துள்ளது.