
கேள்வி பதில்

ஆன்லைனில் வாங்கும் விலை உயர்ந்த எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களுக்கு இன்ஷூரன்ஸ் கிடைப்பதில்லை. இதற்குத் தனியாக இன்ஷூரன்ஸ் எடுப்பது எப்படி?
பிரகாஷ், நாகர்கோவில்.
எஸ். ஸ்ரீதரன், இன்ஷூரன்ஸ் நிபுணர்.

``ஆன்லைனில் வாங்கும் பொருள்களுக்கு, வாங்கும் போதே இன்ஷூரன்ஸ் வழங்கப்படுவதில்லை. ஆனால், தனியாக வேறு ஒரு நிறுவனத்தில் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்ளலாம். இதற்காக பொதுக் காப்பீட்டு நிறுவனத்தை அணுகி, ஆன்லைனில் வாங்கிய பொருளின் இன்வாய்ஸை சமர்ப்பித்து, இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்ளலாம். பொருளின் மதிப்பைப் பொறுத்து ஆண்டு பிரீமியம் செலுத்த வேண்டியதிருக்கும். உதாரணத்துக்கு, `ஐபோன் 8’ போனின் விலை 80,000 ரூபாய். இதன் பிரீமியம், போனின் விலையில் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு சதவிகித அளவில் இருக்கும். அதிகபட்சம் மூன்று சதவிகிதம் வரை இருக்கலாம். இதில் திருட்டு, விபத்தில் சேதமடைதல் போன்றவற்றுக்கு மட்டுமே க்ளெய்ம் கிடைக்கும். ஆண்டு பிரீமியத்தைத் தவிர, வேறு எந்தக் கட்டணமும் கிடையாது. ஒருவேளை மொபைல் காணாமல் போய், அதற்காக க்ளெய்ம் செய்வதாக இருந்தால் மட்டுமே ஆவணக் கட்டணமாக 500 ரூபாய் வசூலிக்கப்படும். மொபைல் தொலைந்துபோனால் எஃப்.ஐ.ஆர் நகலுடன், இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் ஃபார்மில் மொபைல் எங்கு, எப்படித் தொலைந்தது என்பதற்கான காரணத்தைத் தெரிவித்து இழப்பீடு கோர வேண்டும்்.”
என் சொந்த ஊரில், என் பெயரில் நிலம் ஒன்றை வாங்கலாம் என நினைக்கிறேன். சம்பந்தபட்ட சொத்து உரிய முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதா, அதில் ஏதும் பிரச்னைகள் உள்ளதா என்பதைக் கண்டறிய ஆன்லைனில் வில்லங்க சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியுமா? முடியுமெனில் நடைமுறை என்ன?

கணேசன், சென்னை
மணிசங்கர், சொத்து ஆலோசகர்
“தமிழ்நாடு சார்பதிவாளர் துறையின் http://www.tnreginet.net என்ற இணையதளத்துக்குச் சென்று `View EC’ பகுதிக்குள் உள்ளே நுழைந்து Zone/District சர்வே எண் வில்லங்கம் தேடும் வருடங்களில், தேவையான வருடங்களை அதில் பூர்த்திசெய்து, Submit என்பதை க்ளிக் செய்தபிறகு வங்கியின் கணக்கு எண் மற்றும் வங்கியின் கிளை எண்ணைப் பூர்த்தி செய்து, மறுபடியும் Submit என்பதை க்ளிக் செய்தால், உங்கள் விண்ணப்பம் ஏற்கப்படும். அதற்குப் பிறகு விண்ணப்பித்தவரின் முழு விலாசத்தையும் டைப் செய்து, மறுபடியும் Submit பட்டனை க்ளிக் செய்தால், refernce எண் என்ற எண் தங்களுடைய மொபைல் போனிற்கு எஸ்.எம்.எஸ் ஆக வந்து சேரும். குறிப்பிட்ட மூன்று நாள்களிலிருந்து ஏழு நாள்களுக்குள் உங்களுடைய வில்லங்க சான்றிதழ், உங்கள் விலாசத்திற்கு வந்து சேரும். இந்த வில்லங்க சான்றிதழ் பொதுவானதாகும். சொத்து வாங்கும் போது முன்பணம் கொடுக்கும் முன், தொடர்புடைய சார்பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கச் சான்றிதழ் களை முறையாக விண்ணப்பித்துப் பெற்று, சரிபார்த்து பின்பு சொத்தை வாங்கவும்.”
ஐ.டி.ஆர் தாக்கல் காலக்கெடுவைத் தவறவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

சதீஷ், சேலம்
எஸ்.பிரபு, ஆடிட்டர்
“ஒருவர் 2016-17-ம் நிதி யாண்டுக்கான ஐ.டி.ஆர் படிவத்தை, காலக் கெடுக்குள் தாக்கல் செய்யவில்லை என்றாலும், அவர் 2018 மார்ச் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம். இதை, காலம்கடந்த ஐ.டி.ஆர் எனச் சொல்வார்கள். அவ்வாறு காலம் கடந்து தாக்கல் செய்யும்போது, கீழ்க் காண்பவற்றை கருத்தில்கொள்ள வேண்டும். 1.வரியுடன் கெடு தேதியிலிருந்து ஐ.டி.ஆர் தாக்கல் செய்யும் காலத்திற்கு மாதம் ஒரு சதவிகிதம் வட்டி சேர்த்துச் செலுத்த வேண்டும். 2. அந்த வருடத்தில் முதலீட்டின் மூலம் நஷ்டம் ஏதாவது இருந்திருந்தால், அதை இவ்வாறு காலம் கடந்து ஐ.டி.ஆர் தாக்கல் செய்வதால் அடுத்த வருடத்திற்குச் சரி செய்துகொள்ள முடியாது. 3. ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. காலம் கடந்து ஐ.டி.ஆர் தாக்கல் செய்பவர்கள் இந்த விஷயங் களையும் கருத்தில்கொள்ள வேண்டும்.”
தொகுப்பு: சோ.கார்த்திகேயன்
கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.