
கேள்வி - பதில்

பிட்காயின்கள்தான் எதிர்காலத்தில் உலகம் முழுவதும் புழக்கத்தில் வருமா? இந்தியாவில் பிட்காயின்கள் சட்டபூர்வமானவைதானா? அதில் முதலீடு செய்யலாமா?

கே.தமிழரசன், கரூர்
ஸ்ரீகாந்த் மீனாட்சி, ஃபண்ட்ஸ் இந்தியா
பிட்காயின்கள் பொதுப் புழக்கத்தில் வர பல வருடங்கள், ஏன் தசாப்தங்கள் கூட ஆகலாம். பெரும்பான்மையான மத்திய வங்கிகள் இவற்றை இன்னும் அங்கீகரிக்கவில்லை.
இந்தியாவில் இன்னும் இது சட்டபூர்வமான பண வகையாக ஆக்கப்படவில்லை. இந்த நிலையில், இதை ஒரு முதலீட்டுச் சாதனமாகக் கருதி பணம் போடுவது என்பது மிகவும் ஆபத்தான விஷயம். இதில், லாபம் வந்தாலும் அதற்கு அதிக வருமான வரி கட்ட வேண்டி வரும். ஆகையால், இதிலிருந்து ஒதுங்கியிருப்பதே இன்றைய அளவில் சமயோசிதமான விஷயம்.

என்னால் மூன்று ஆண்டுகள் வரை காத்திருக்க முடியும். பங்குச் சந்தை உயர்ந்துள்ள நிலையில் இப்போது எந்த ஃபண்டில் முதலீடு செய்வது நல்லது?
மணிகண்டன், மகாலிங்கபுரம்.
ஏ.கே.நாராயண், நிதி ஆலோசகர்
முதலீட்டை மொத்தமாக மேற்கொள்வதாக இருந்தால், பங்குச் சந்தை உச்சத்தில் இருப்பதால் அதனை இப்போது லிக்விட் ப்ளஸ் ஃபண்டில் முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும்.
நீங்கள் மூன்றாண்டுகள் காத்திருக்கத் தயார் எனச் சொல்லியிருப்பதால், லிக்விட் ப்ளஸ் முதலீட்டை சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்பர் பிளான் (எஸ்.டி.பி) மூலம் ஈக்விட்டி ஃபண்டுக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த ஈக்விட்டி ஃபண்டை உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்பத் தேர்வு செய்யுங்கள். அது ஒரு மல்டி கேப் ஃபண்டாக இருக்கும்பட்சத்தில் ரிஸ்க் பரவலாக்கப்படும்.
புதிதாக மியூச்சுவல் ஃபண்ட் வெளியீடு வருவது பற்றி எப்படித் தெரிந்துகொள்வது?

ஜெகநாதன், பெருந்துறை
எஸ்.பாரதிதாசன், நிதி ஆலோசகர்
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் புதிதாக ஃபண்ட் வெளியிடுவதை (என்.எஃப்.ஓ) பத்திரிகைகள், இணையதளங்கள் மூலம் செய்தியாக, விளம்பரமாகத் தெரிவிக்கும். இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பின் இணையதளமான Amfiindia.com-ல் இந்த விவரங்கள் கிடைக்கும். மேலும், தொடர்புடைய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் இணையதளத்திலும் பார்க்கலாம்.

வங்கி சேமிப்புக் கணக்கைவிட லிக்விட் ஃபண்டில் அதிக வருமானம் கிடைக்கும்; அவசரத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள இது ஏற்றதாக இருக்கும் என்கிறார் என் நண்பர். இது உண்மையா?
சிவகுமார், தஞ்சாவூர்
சா.ராஜசேகரன், நிதி ஆலோசகர், Wisdomwealthplanners.com
உங்கள் நண்பர் சொல்வது உண்மைதான். வங்கி சேமிப்புக் கணக்கைவிட(3.5-4%) லிக்விட் ஃபண்டில் ஓரிரு சதவிகிதம் வருமானம் (சுமார் 6.45%) அதிகமாகக் கிடைக்கும். மேலும், இதில் நுழைவுக் கட்டணம் மற்றும் வெளியேறும் கட்டணம் கிடையாது. இந்த லிக்விட் ஃபண்டில், அரை மணி நேரத்தில் ரூ.2 லட்சம் வரை ஆன்லைன் மூலம் எடுத்துக்கொள்ள முடியும்.
மேலும், சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், லிக்விட் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு ஏ.டி.எம் கார்டுகளையும் கொடுத்திருக்கின்றன. இதன்மூலம் முதலீட்டுத் தொகையில் 50% வரைக்கும் எடுத்துக்கொள்ள முடியும்.
மொத்தத் தொகையும் தேவையென்றால், இன்று காலை 11 மணிக்கு ரிடெம்ஷன் படிவத்தை நிரப்பிக் கொடுத்தால், நாளை காலை 12 மணிக்குள் உங்கள் வங்கிக் கணக்குக்குப் பணம் வந்துவிடும். அந்த வகையில், அவசரத் தேவைக்கான பணத்தை, வங்கியில் வைப்பதைவிட லிக்விட் ஃபண்டில் வைத்திருப்பது லாபகரமாக இருக்கும்.
தொகுப்பு : தெ.சு.கவுதமன்
கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.