இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமன்ட் நிறுவனமான Phonepe, கடந்த வெள்ளியன்று 5 பில்லியன் பரிவர்த்தனைகளைக் கடந்ததாக அறிவித்துள்ளது. பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட இந்திய பேமன்ட் நிறுவனமான Phonepe சென்ற வருடம் நவம்பர் மாதம்தான் 1 பில்லியன் பரிவர்த்தனைகள் தங்கள் சேவையின் மூலம் மேற்கொள்ளப்பட்டதாக அறிவித்திருந்தது. அதாவது, ஒரு வருடத்தில் அதன் வளர்ச்சி விகிதம் 5 மடங்கு அதிகரித்துள்ளது.

மேலும், இதன் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான சமீர் நிகம் கூறுகையில், ``கடந்த நான்கு ஆண்டுகளில் நிறுவனத்தின் வளர்ச்சி நம்பமுடியாத அளவில் இருந்துள்ளது. சிறு மற்றும் குறு நிறுவனங்கள்தான் இந்திய பொருளாதாரத்துக்கு அதிக அளவில் பங்களிக்கின்றன. எனவே, சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கான நிதி சார்ந்த சேவைகளை வழங்குவது மற்றும் அது தொடர்பான தீர்வுகளை வழங்குவதும் எங்களைப் போன்ற ஒரு நிறுவனத்துக்கு அவசியமானதாகிறது" என்றார்.

இந்தியா முழுவதும் 215 நகரங்களில் 80 லட்சத்துக்கும் அதிகமான சிறு மற்றும் குறு நிறுவனங்கள் Phonepe சேவையை தங்கள் பணப் பரிவர்த்தனை தேவைக்காகப் பயன்படுத்திவருகின்றன. இதில் 56 சதவிகிதம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களைச் சேர்ந்த நிறுவனங்கள். இதுவரை 150 மில்லியன் வங்கிக் கணக்குகள் Phonepe-உடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், 56 மில்லியன் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தகவல்கள் Phonepe-வில் சேமிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.