ட்விட்டர் சிஇஓ-வான எலான் மஸ்க், தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளையும், விவகாரமான பதிவுகளையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
அதிரடிப் பணி நீக்கம், ப்ளூ டிக் கட்டணம், தனியார் நிறுவனங்களின் ட்விட்டர் கணக்குகள் மீதான நடவடிக்கைகள், பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம் போன்ற எலானின் அண்மைக்கால ட்விட்டர் நடவடிக்கைகள் பெரும் விமர்சனங்களுக்குள்ளானது. இதையடுத்து எலான் ட்விட்டர் சிஇஓ பதவியிலிருந்து விலகினால்தான் ட்விட்டர் ஈடேறும், இல்லையெனில் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும் எனப் பலர் விமர்சித்திருந்தனர்.
இதனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எலான் மஸ்க், "நான் ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமா?" என ட்வீட் செய்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியிருந்தார். மேலும், பெரும்பான்மையானவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டு அதற்குத் தான் கட்டுப்படுவதாகவும் எலான் உறுதியளித்திருந்தார்.
இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் எலான் மஸ்கிற்கு எதிராகத் திரும்பின. இதில் 57.5 சதவிகிதத்துக்கும் அதிகமான பயனர்கள் எலான் பதவி விலக வேண்டும் (ஆம்) என்றும், சுமார் 42.5 சதவிகிதம் பேர் பதவி விலக வேண்டாம் (இல்லை) என்றும் பதிலளித்திருந்தனர்.
இதையடுத்து உறுதியளித்ததன் படி எலான், "இந்த வேலையை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு முட்டாள்தனத்துடன் ஒருவர் கிடைத்தபிறகு மிக விரைவில் நான் ட்விட்டர் சிஇஓ பதவியிலிருந்து விலகுவேன். அதன்பின், சாஃப்ட்வேர் மற்றும் சர்வர் டீம்களை மட்டும் நான் கவனித்துக் கொள்வேன்" என்று பதிலளித்திருந்தார்.
இதையடுத்து பலரும் ட்விட்டர் சிஇஓ பதவிக்கு விண்ணப்பித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இ-மெயிலை கண்டுபிடித்த சாதனைத் தமிழரான சிவா அய்யாதுரை அவர்களும் இதற்கு விண்ணப்பிருந்தார்.
இந்நிலையில் எலான் மஸ்க் தற்போது, ட்விட்டருக்கு புதிய சிஇஓ-வை தேர்வு செய்துவிட்டதாகவும், அவர் பெயரைக் குறிப்பிடாமல் அவர் ஒரு பெண் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சிஇஓ பதவியை அவரிடம் ஒப்படைத்து விட்டு தான் ட்விட்டரை பின்னிருந்து நிர்வகிக்கவுள்ளாதக் கூறியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள எலான், "ட்விட்டருக்குப் புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமித்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்னும் ஆறு வாரங்களில் அவர் தன் பணியைத் தொடங்கவுள்ளார். தயாரிப்பு, மென்பொருள் மற்றும் 'exec chair & CTO' பொறுப்புகளிலிருந்து ட்விட்டரை நிர்வகிக்கப்போகிறேன்" என்று கூறியுள்ளார். இந்த சிஇஓ- பதவியில் பொறுப்பேற்கவுள்ள அந்தப் பெண் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
எலான் மஸ்க் எடுத்துள்ள இந்த முடிவு குறித்த உங்களின் கருத்துகளைக் கமென்ட்டில் பதிவிடுங்கள்!