கூகுள் மேப்ஸ் இறுதியாக இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் அதன் ஸ்ட்ரீட் வியூ (Street View) சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. இந்தச் சேவையைக் கூகுள் நிறுவனம் டெக் மஹிந்திரா மற்றும் ஜெனிசிஸ் உடன் இணைந்து செயல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த கூகுள் ஸ்ட்ரீட் வியூவை பயன்படுத்தி பயனர்கள் உலகெங்கிலும் உள்ள வீதிகளை 360 டிகிரி கோணத்தில் பார்க்க முடியும் என்று அந்நிறுவனம் தெரிவிக்கிறது.
ஏற்கெனவே கூகுள் இந்தச் சேவையை இந்தியாவில் தொடங்க முயன்றபோது, போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் அதன் செயல்பாடுகளுக்கு இரண்டு முறை அனுமதி கேட்ட பொழுதும் இந்திய அரசாங்கம் அனுமதி அளிக்காமல் மறுத்துள்ளது.

இந்நிலையில் தேவையான பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்து இந்தியாவின் 10 முக்கிய நகரங்களில், அதாவது பெங்களூரு, சென்னை, டெல்லி, மும்பை, ஹைதராபாத், புனே, நாசிக், வதோதரா, அகமது நகர் மற்றும் அமிர்தசரஸ் போன்றவற்றில் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மேலும் 2022-ம் ஆண்டு இறுதிக்குள் 50க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களில் இந்தச் சேவையைக் கொண்டுவரத் திட்டமிட்டிருப்பதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது. தனிநபர் பாதுகாப்பிற்காக இந்த ஸ்ட்ரீட் வியூவில் தனிநபர்களின் முகங்கள் மற்றும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் மங்கலாகத்தான் காண்பிக்கப்படும் என்று கூகுள் கூறியிருக்கிறது. கூடுதலாக, காற்றினுடைய தரத்தின் தகவல்களை வழங்குவதற்காக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துடனும் (CPCB) கூகுள் இணைந்துள்ளது.
