ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில் உள்ள நவ்ரங்க் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பாலாராம்(55). கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிவனை வழிபடுவதும், அவருக்கு சேவை செய்வதிலும் தனது காலத்தைக் கழித்தார் பாலாராம்.
பாலாராமுக்கு 7 சகோதரிகள். அவர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்த பிறகு பார்த்தால் பாலாராமிற்கு 55 வயதாகியது. சகோதரிகளின் திருமணம் மற்றும் இறைசேவைகளால் பாலாராம் தனது திருமணத்தை பற்றி நினைத்துக்கூட பார்க்கவில்லை. 55 வயதான பிறகுதான் திருமணம் செய்வது என்று முடிவு செய்தார்.

உடனே அவரது உறவினர்கள் பெண் பார்க்க ஆரம்பித்தனர். அந்நேரம் நாபா அருகில் உள்ள கிராமத்தில் வினிதா என்ற பெண் இருப்பது தெரிய வந்தது. அப்பெண் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி என்று தெரிய வந்தது. அந்த பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார். வினிதா 12 வயதாக இருந்த போது மரத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் அவரது இடுப்புக்குக் கீழே பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் நடக்க முடியவில்லை. அவருக்கு குடும்பத்தினர் பல கட்ட சிகிச்சையளித்தும் அவரால் நடக்க முடியவில்லை. இதனால் அவருக்குத் திருமணம் நடக்காமல் இருந்தது. இந்நிலையில், பாலாராமுக்கு வினிதாவைத் திருமணம் செய்துவைக்க வினிதாவின் பெற்றோர் முடிவு செய்தனர். இருவருக்கும் நடந்த திருமணத்தை கிராம மக்கள் சேர்ந்து முன்னின்று நடத்தி வாழ்த்தியிருக்கின்றனர்.