கடலூர், மஞ்சக்குப்பம் மேற்கு வேணுகோபாலபுரத்தைச் சேர்ந்தவர் பாலச்சந்தர். சீன நாட்டில் பணியாற்றி வரும் இவருக்கும், அந்த நாட்டைச் சேர்ந்த யீஜியோ என்ற பெண்ணுக்கும் சமூக வலைதளம் மூலம் ஏற்பட்ட நட்பு, நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த பிறகு, தங்களின் பெற்றோரிடம் அனுமதி கேட்டிருக்கின்றனர். இவர்களின் காதலை புரிந்துகொண்ட பெற்றோர்கள், பாலச்சந்தர் - யீஜியோ திருமணத்துக்கு பச்சைக்கொடி காட்டியிருக்கின்றனர். அதையடுத்து இந்தியாவில் தமிழ் முறைப்படி திருமணம் செய்வதற்கு யீஜியோவின் பெற்றோர் சம்மதம் தெரிவித்ததையடுத்து, கடலூரில் திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்தனர் பாலச்சந்தரின் பெற்றோர்.

அதன்படி நேற்று மாலை கடலூர் முதுநகரில் ஒரு தனியார் திருமண நிலையத்தில் திருமண வரவேற்பு நிகழ்வும், இன்று காலை திருமணமும் நடைபெற்றது. மணமகன் பாலச்சந்தர் தமிழ் கலாசாரத்தின்படி பட்டு வேஷ்டி சட்டையும், சீன நாட்டைச் சேர்ந்த மணமகள் யீஜியோ பட்டு சேலை மற்றும் தமிழ் பாரம்பர்ய அணிகலன்களும் அணிந்திருந்தனர்.
மணமேடையில் இருவரும் அமர, மங்கல இசை முழங்க தமிழ் முறைப்படி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. மணமக்களை வாழ்த்திய உறவினர்கள் அவர்களுடன் மகிழ்ச்சியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இவர்களின் திருமணம் முடிந்தவுடன், பாலச்சந்திரனின் சகோதரர் பாலமுருகனுக்கும் அதே மேடையில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் குறித்துப் பேசிய பாலச்சந்தர், ``சீனா மற்றும் பாங்காங்கில் தொழில்முனைவராக இருந்து வருகிறேன். காதலுக்கு எல்லை என்று ஒன்று கிடையாதே... அதனடிப்படையில் எனக்கும் யீஜியோவுக்கும் சமூக வலைதளம் மூலமாக நட்பு ஏற்பட்டது. அதன்பிறகு ஒருவரைப் பற்றி ஒருவர் புரிந்து கொண்டோம். என் மீது யீஜியோ செலுத்திய அன்பு எங்களுக்குள் காதலை ஏற்படுத்தியது. அதையடுத்து இந்திய கலாசாரம் மற்றும் தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொள்ள, எங்கள் இருவரின் பெற்றோரும் சம்மதித்தனர். இன்று பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முன்னிலையில் எங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம்” என்றார் மகிழ்ச்சியாக.