தமிழக காவல்துறையில் கோவை மாவட்ட குற்ற ஆவணக் காப்பக துணை காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிவருபவர் வெற்றிச்செல்வன். முன்னதாக இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு எஸ்.ஐ.சி எனப்படும் மதம் சார்ந்த பிரச்னைகளைக் கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவில் பணியாற்றிவந்தார். காவல்துறையில் எஸ்.ஐ.சி அமைப்பில் கோவை மாவட்டத்தில் பணியாற்றி வந்தபோது மதம் சார்ந்த பிரச்னைகளைச் சிறப்பாகக் கையாண்டு, பிரச்னைகளுக்குச் சுமுகமாகத் தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார் வெற்றிச்செல்வன்.

இவரின் மகள் நிஷாந்தினி. பிஹெச்.டி படித்து வரும் இவருக்கு திருநெல்வேலியைச் சேர்ந்த சுதர்சன் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இவர்களது திருமணத்தை மதத்தைக் கடந்து நடத்த முடிவெடுத்த வெற்றிச்செல்வன், இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் மத குருமார்கள் முன்னிலையில் நடத்த முடிவெடுத்தார். மேலும், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளார், கௌமார மடாலயம் குருமகா சந்நிதானம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், காமாட்சி புரி ஆதீனம் ஞானகசாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள், கோவை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்விவினாஸ் மற்றும் போத்தனூர் இமாம் மஸ்ஜிதே இப்ராஹிம் சுன்னத் ஜமாஅத் தலைவர் மெளல்வி அல்லாஜ் அப்துல் ரஹீம் இம்தாதி பாகவி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
மும்மதங்களைச் சேர்ந்த குருமார்களின் பெயர்களும் திருமண பத்திரிகையில் அச்சிடப்பட்டிருக்கின்றன. மேலும் திருமணப் பத்திரிகையில்,
"உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு."
என்ற திருக்குறளும் அச்சிடப்பட்டிருக்கிறது.
தற்போது இந்தப் பத்திரிக்கை சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது.

இது குறித்து காவல் அதிகாரி வெற்றிச்செல்வனிடம் பேசினோம். ``பள்ளிக் கல்லூரி படித்துக்கொண்டிருந்த காலம் முதலே மத குருமார்கள் மத்தியில் எனக்குப் பழக்கம் இருந்துவருகிறது. இவர்கள் முன்னிலையில் என் வீட்டு திருமணத்தை நடத்துவது என்பது எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய நண்பர்கள் வட்டத்திலும் எல்லா மதங்களைச் சார்ந்த நண்பர்கள் இருக்கிறார்கள். அதற்காகத்தான் எல்லாரையும் என் வீட்டுத் திருமணத்துக்கு வரவேற்பதற்காக அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தேன். மேலும், காவல்துறை அதிகாரியாக என் மகளின் திருமணத்தை மதங்களைக் கடந்து நடத்த வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. திருக்குறள் மீது எனக்கு பயங்கர ஈடுபாடு உண்டு. இன்பத்துப் பாலில் திருவள்ளுவர் கூறியதுபோல், கணவன் மனைவிக்கிடையே இருக்கும் நட்பு என்பது உயிரும் உடலும் ஒன்றையொன்று பிரிந்து தனித்தனியாக இருக்க முடியாதோ, அதேபோல மணமக்களின் உறவில் இருவரும் சேர்ந்து இருத்தலில்தான் அவர்களது வாழ்க்கை அமைந்திருக்கிறது என்பதைக் கூறும்விதமாக அந்தக் குறளைக் குறிப்பிட்டிருந்தேன்.

இந்தத் திருமண நிகழ்வு வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கோவை மாவட்டம் சூலூரிலுள்ள திருமண மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது. இதில் காவல்துறை இயக்குநர்கள் ஏ.கே.விஸ்வநாதன், சீமா அகர்வால், கூடுதல் இயக்குநர் அமல்ராஜ், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தவிருக்கின்றனர்" என்றார்.