கணவர் இறந்த பிறகு மறுமணம் செய்வது என்பது வடமாநிலங்களில் இன்றும் கடினமானதாக இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஜுனவாசி என்ற இடத்தை சேர்ந்த 34 வயது பெண்ணின் கணவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அப்பெண்ணுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் அப்பெண் 35 வயது நபர் ஒருவரை மறுதிருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்காக அந்த நபர், அப்பெண்ணை சந்திக்க கிராமத்திற்கு வந்தார்.
உடனே கிராம மக்கள் இரண்டு பேரையும் தனித்தனியாக மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். அவர்களைச் சுற்றி நின்றவர்கள் தங்களது மொபைல் போனில் வீடியோ எடுப்பதில் ஆர்வம் காட்டினர். ஆனால் யாரும் அடிப்பதை தடுக்க முன் வரவில்லை. கைம்பெண்ணை அடிப்பது போன்ற ஒரு வீடியோவும், அவரை திருமணம் செய்யப்போகும் நபரை அடிப்பது போன்ற மற்றொரு வீடியோவும் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டன.

அப்பெண்ணை அடித்த போது அவரின் குழந்தைகள் அருகில் நின்று அழுதுகொண்டிருந்தன. தொடர்ந்து 3 மணி நேரம் இரண்டு பேரையும் அடித்து உதைத்துள்ளனர். ஒரு கட்டத்தில் அப்பெண் மயங்கி விழுந்துவிட்டார். அவரை இழுத்துச்சென்று வீட்டிற்குள் போட்டு அடைத்து வைத்தனர்.
இந்த வீடியோ வெளியானதும், நிலப்பிரச்னையில்தான் இருவரையும் கட்டி வைத்து அடிப்பதாக போலீஸார் நினைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து நான்கு பேரை கைது செய்து, அடைத்து வைக்கப்பட்ட பெண்ணை மீட்டனர். அப்பெண்ணிடம் விசாரித்தபோது, தான் மறுமணம் செய்ய விரும்பியதாகவும், ஆனால் அதற்குத் தன் குடும்பத்தினரும், சமுதாயத்தினரும் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அப்பெண்ணை தாக்கியவர்கள் அவரின் உறவினர்கள் மற்றும் அவரின் கணவர் வீட்டை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. இருவரையும் தாக்கிய மேலும் 4 பேர் தலைமறைவாக இருக்கின்றனர்.