Hunter Biden: `25 ஆண்டுகள் வரை சிறை'- பைடன் மகனைக் குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம்! - பின்னணி என்ன?
சட்ட விரோதமாகத் துப்பாக்கி வாங்கியது தொடர்பாக தொடரப்பட்ட மூன்று வழக்குகளில், அமெரிக்க அதிபர் பைடனின் மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவின் 46-வது அதிபராக கடந்த 2021-ம் ஆண்டு முதல் பதவியில் இருந்து வருபவர் ஜோ பைடன். அங்கு இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும், குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்பிற்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் இரு தரப்பும் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்தச் சூழலில், சட்ட விரோதமாகத் துப்பாக்கி வாங்கியது தொடர்பாக தொடரப்பட்ட மூன்று வழக்குகளில், அமெரிக்க அதிபர் பைடனின் மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவைப் பொறுத்தவரைத் துப்பாக்கிகள் வாங்க நம் நாட்டை போன்று கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை. 18 வயது நிறைவடைந்த எவரும் சட்டபூர்வமாகவே கடைகளில் சென்று துப்பாக்கிகளை வாங்கிக்கொள்ளலாம். அப்போது துப்பாக்கி வாங்குபவர்கள் ஒரு விண்ணப்பத்தை மட்டும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதில் வாங்கும் நபரின் தனிப்பட்ட தகவல்கள், போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக சில கேள்விகள் இடம்பெற்றிருக்கும். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகனான ஹண்டர் பைடன் கடந்த 2018-ல் துப்பாக்கி ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது அவர் நிரப்பிக் கொடுத்த விண்ணப்பப் படிவமே அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு, ஹண்டர் பைடன் துப்பாக்கி ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது அவர் நிரப்பிக் கொடுத்த விண்ணப்பப் படிவத்தில் போதைப்பொருள் பயன்பாடு குறித்த கேள்விக்கு ஹண்டர் பைடன் போதைப்பொருள் எதையும் பயன்படுத்தவில்லை என்று விண்ணப்பத்தில தவறான தகவல்களை பூர்த்தி செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், ஹண்டர் பைடன் அப்போது போதைப்பொருளைப் பயன்படுத்தி இருக்கிறார்.
இந்த துப்பாக்கியை அவர் சுமார் 11 நாள்கள் தன்வசம் வைத்து இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாகவே அவர் மீது கடந்த 2023 செப்டம்பர் மாதம் வழக்குகள் தொடரப்பட்டன. போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக அமெரிக்க அரசிடம் பொய் கூறியது, போதைப்பொருள் பயன்படுத்தும்போது துப்பாக்கியை வைத்திருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.
துப்பாக்கியை விற்றது தொடர்பான விவகாரத்தில் பொய் வாக்குமூலம் அளித்தது, துப்பாக்கியை வாங்கும்போது நடந்த பணப் பரிமாற்றம் தொடர்பாக பொய் வாக்குமூலம் அளித்தது, போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்தபோது கை துப்பாக்கியை வைத்திருந்தது என மூன்று வழக்குகள் அவர்மீது தொடரப்பட்ட நிலையில், மூன்றிலும் அவர் குற்றவாளி என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கை விசாரிக்க 12 பேர் கொண்ட தலைமை நிதிபதிகள் (ஜூரிக்கள்) குழு அமைக்கப்பட்டது, அவர்கள் நடத்திய தீவிர ஆலோசனையின் இறுதியில்தான் அவர்கள் ஹண்டர் பைடன் குற்றவாளி என முடிவெடுத்தனர்.
இதில் முதல் இரண்டு வழக்குகளில் தலா 10 ஆண்டுகள், மூன்றாவது வழக்கில் 5 ஆண்டுகள் என, அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை அவருக்குத் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

அதேநேரம் அவரது தண்டனை விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அமெரிக்க சட்டப்படி குற்றவாளி என அறிவிக்கப்பட்டவருக்கு 120 நாள்களில் தண்டனை விவரம் அறிவிக்கப்பட வேண்டும். அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் நிலையில், அதற்குள் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் எனவும், "அமெரிக்க அதிபரின் மகன் ஒருவர், குற்ற வழக்கில் தண்டிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்" என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
தீர்ப்பு வாசிக்கப்படும்போது ஹண்டர் பைடனின் மனைவி மெலிசா கோஹன் நீதிமன்ற அறையில்தான் இருந்தார். இரு தரப்பு வாதமும் நேற்று நிறைவடைந்து, மூன்று மணி நேர விசாரணைக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது. தண்டனை குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி மேரிலென் நோரிகா அறிவித்துள்ளார். இந்த வழக்கில் தனது மகன் குற்றவாளி என தீர்ப்பு வந்தால், அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படாது என அதிபர் பைடன் முன்னதாகவே அறிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்ப்பு வெளியான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் பைடன், நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாகவும், அதேநேரம் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.













எனினும், கண்ணியத்தையும் மரியாதையையும் காப்பது அனைவரின் பொறுப்பு. தனிப்பட்ட தாக்குதல், அவதூறு அல்லது வெறுப்பைத் தூண்டும் கருத்துகளை விகடன் அனுமதிக்காது.
அத்தகைய கருத்துகள் Moderation பகுதிக்குச் செல்லக்கூடும் அல்லது நிராகரிக்கப்படலாம் என்பதைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.