Maharashtra: ``வயது வந்த மக்களை விட வாக்காளர் எண்ணிக்கை அதிகமானது எப்படி?'' -ராகுல் காந்தி கேள்வி
"எந்தெந்த தொகுதிகளில் வாக்காளர்கள் அதிகபடுத்தப்பட்டுள்ளார்களோ, அந்த தொகுதிகளிலெல்லாம் பாஜக வென்றுள்ளது.." -ராகுல் காந்தி
மகாராஷ்டிரா மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் உள்ள சிக்கல்களை சுட்டிக்காட்டியிருக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி.
வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கையின் மாநிலத்தின் மொத்த வயதுவந்தோர் (18 வயதுக்கு மேற்பட்டோர்) எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சிவசேனா (உத்தவ் தாக்ரே) கட்சியைச் சேர்ந்த சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்ரியா சுலே ஆகியோருடன் பத்திரிகையாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, மக்களவைத் தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையிலான ஐந்து மாதங்களில், மகாராஷ்டிராவில் 39 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக தெரிவித்தார்.
குறைந்த நாள்களிலேயே அதிகப்படியான வாக்காளர் சேர்க்கை நடந்துள்ளதைக் குறித்து கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியலை ஆராய்ந்ததில் எதிர்க்கட்சி பல முறைகேடுகளை கண்டறிந்ததாக தெரிவித்துள்ளார்.

ராகுல் கூறியதன்படி, மகாரஷ்டிராவில் வாக்களிக்கத் தகுதியானவர்களின் எண்ணிக்கை 9.54 கோடி என அரசாங்க பதிவுகள் கூறுகின்றன. ஆனால் சட்டமன்ற தேர்தலில் 9.7 கோடிபேர் வாக்களித்துள்ளனர்.
மேலும் அவர், தேர்தல்களுக்கு இடையிலான காலத்தில் அதிகரித்த அந்த 39 லட்சம் பேர் யார் எனக் கேள்விஎழுப்பினார். எந்தெந்த தொகுதிகளில் வாக்காளர்கள் அதிகபடுத்தப்பட்டுள்ளார்களோ அந்த தொகுதிகளிலெல்லாம் பாஜக வென்றுள்ளதாகவும் ராகுல் சுட்டிக்காட்டினார்.
"39 லட்சம் என்பது ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தின் வாக்காளர் எண்ணிக்கைக்கு சமம். அடுத்ததாக மாநிலத்தின் மொத்த தகுதியான மக்களின் எண்ணிக்கையைவிட வாக்காளர்கள் எண்ணிக்கை எப்படி அதிகமாக இருக்க முடியும்?" என்றார் ராகுல் காந்தி.
மேலும், "இது இந்த சிக்கலின் சிறிய பகுதிதான். பெரிய பகுதி எத்தனை வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்பதில் இருக்கிறது. நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்." என்றார்.

தேர்தல் ஆணையத்தின் பதில்
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வினையாற்றிய தேர்தல் ஆணையம், "எழுத்துப்பூர்வமாக நாடுமுழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைப்படி முழு உண்மையுடன் பதிலளிப்போம்" எனக் கூறியுள்ளது.
பட்னாவிஸ் எதிர்வினை
மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
"பிப்ரவரி 8-ம் தேதி டெல்லியில் தேர்தல் முடிவுகள் வருகின்றன. அவரது கட்சி அங்கு ஒரு இடம் கூட வெற்றிபெறாது என்பதால் நெருப்பை அணைக்க முயன்றுகொண்டிருக்கிறார்.
அவர் தன்னை சுய பரிசோதனை செய்துகொள்ளாமல், பொய்களைச் சொல்லி தன்னை ஆறுதல் படுத்திக்கொண்டிருந்தால், அவரது கட்சி மறுமலர்ச்சி பெறுவது இயலாத காரியமாகிவிடும். அவரது தோவியை அவர் சுயபரிசோதனை செய்ய வேண்டும்" எனக் கூறியிருக்கிறார் பட்னாவிஸ்.













எனினும், கண்ணியத்தையும் மரியாதையையும் காப்பது அனைவரின் பொறுப்பு. தனிப்பட்ட தாக்குதல், அவதூறு அல்லது வெறுப்பைத் தூண்டும் கருத்துகளை விகடன் அனுமதிக்காது.
அத்தகைய கருத்துகள் Moderation பகுதிக்குச் செல்லக்கூடும் அல்லது நிராகரிக்கப்படலாம் என்பதைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.