கதிர் ஆனந்தின் பிள்ளைகள் கழுத்தில் கட்சி துண்டு; கையில் நோட்டீஸ்- தேர்தல் விதிகளை மீறிய திமுகவினர்?!
தேர்தல் ஆணையத்தின் உத்தரவைப் பின்பற்றாமல், வேலூர் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்தின் சிறு வயது பிள்ளைகள் பிரசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

‘தேர்தல் பிரசாரங்களில் குழந்தைகளையோ, சிறுவர்களையோ பயன்படுத்தக் கூடாது’ என்று தேர்தல் ஆணையம் கண்டிப்போடு உத்தரவிட்டிருக்கிறது. இது தொடர்பாக ஓர் அறிவுறுத்தலையும் முன்கூட்டியே வழங்கியிருந்தது தேர்தல் ஆணையம். ‘‘அரசியல் பிரசார மேடைகளில் குழந்தைகளைப் பேச வைப்பது, முழக்கமிட வைப்பது, துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க வைப்பது உள்ளிட்ட எந்த ஒரு செயல்களிலும் குழந்தைகளை ஈடுபட வைக்கக் கூடாது. வேட்பாளரின் சின்னங்களைக் காட்சிப்படுத்துதல், குழந்தைகளைப் பயன்படுத்தி அரசியல் பிரசாரத்தின் சாயலை உருவாக்கவும் தடை இருக்கிறது.

எனவே, குழந்தை தொழிலாளர் சட்டங்கள் மற்றும் தேர்தல் வழிகாட்டுதல்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் இதை உறுதி செய்ய வேண்டும். இந்த விதிமுறைகளை மீறும் கட்சிகள்மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவைமீறும் வகையில் வேலூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்தின் மகள் மற்றும் மகன் ஆகியோரை தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க-வினர் ஈடுபடுத்தியிருக்கின்றனர்.
இரண்டுப் பிள்ளைகளும் 15 வயதுகூட பூர்த்தியாகாதவர்கள். பள்ளியில் படிக்கிறார்கள். கடை கடையாக... வீதி வீதியாக இரண்டு பிள்ளைகளையும் தி.மு.க-வினர் அழைத்துச் சென்று வாக்கு சேகரிக்க வைத்திருக்கிறார்கள். இருவரின் கழுத்திலும் கட்சித் துண்டு அணிவிக்கப்பட்டிருந்தது.

வேட்பாளரின் புகைப்படம், சின்னம் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் கையில் வைத்திருந்த இருவரும் ‘எங்க அப்பாவுக்கு ஓட்டுப்போடுங்க அங்கிள், ஆன்ட்டி’ என்று வாக்காளர்களிடம் கொடுத்தனர். இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் கதிர் ஆனந்தின் ஆதரவாளர்களே பரப்பிக்கொண்டிருக்கின்றனர். தேர்தல் ஆணையத்தின் உத்தரவைப் பின்பற்றாத இந்தச் செயலை தடுக்காமலும், சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்காலும் தேர்தல் அலுவலர்கள் அமைதியாக இருப்பதாகவும் போட்டி வேட்பாளர்கள் தரப்பினர் குற்றஞ்சாட்டி கடுகடுக்கிறார்கள்.













எனினும், கண்ணியத்தையும் மரியாதையையும் காப்பது அனைவரின் பொறுப்பு. தனிப்பட்ட தாக்குதல், அவதூறு அல்லது வெறுப்பைத் தூண்டும் கருத்துகளை விகடன் அனுமதிக்காது.
அத்தகைய கருத்துகள் Moderation பகுதிக்குச் செல்லக்கூடும் அல்லது நிராகரிக்கப்படலாம் என்பதைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.